எதிர்ப்புகளை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றால் மைதானத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படும்: சீமான் எச்சரிக்கை
எதிர்ப்புகளை மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை
சென்னை: எதிர்ப்புகளை மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசால் வஞ்சகம் செய்யப்பட்டு, தமிழக நிலவியல் மீது போர் தொடுக்கப்பட்டு இருப்பதன் விளைவாகத் தமிழகமே கொந்தளித்து கிடப்பதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடக்கோரியும் மிகப்பெரும் போராட்டங்கள் வெடித்து, தமிழர் நிலமே போர்க்கோலம் பூண்டுள்ளது.
தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காகத் தமிழகமே ஒற்றைக் குரலெடுத்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தலைநகர் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்திட முனைவது தமிழர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் அவமதிக்கிற கொடுஞ்செயலாகும்.
Advertisement
தமிழர்களின் உரிமைப் போராட்டங்களையும், உணர்வெழுச்சியையும் துளியும் பொருட்படுத்தாது ஐபிஎல் போட்டிகளை தமிழகத்தில் நடத்திட முற்பட்டால் அதற்குப் பிறகு மைதானத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அவர்களே பொருப்பேற்க நேரிடும் என்றும் போட்டி நடக்கவிருக்கிற அன்றே மிகப்பெரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.