முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ் மாவட்ட அமைப்பாளர் பாஸ்கரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (37). மாவட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளரான இவர், வீட்டிலேயே முட வைத்திய சாலை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் தனது நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்று விட்டு திரும்பியவர், நேற்று இரவு வீட்டில் அவர் மனைவி தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் சுவர் மீது ஏறி வீட்டு வாசலில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். இதில் வீட்டின் கதவு சேதமடைந்தது. மேலும் அங்கு இருந்த துணிகளும் எரிந்தது. 

சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்து பார்த்த பாஸ்கரனின் மனைவி பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  

இதுகுறித்து பாஸ்கரனின் சகோதரர் பிரபாகரன் குன்றக்குடி காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து டிஎஸ்பி கார்த்திகேயன், ஆய்வாளர் ஆத்மநாதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →