புதுதில்லி: அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தில்லியில் இருந்து கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், 3 மத்திய ஆசிய நாடுகளில் இன்று வியாழக்கிழமை (ஆக.2) முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முதல்கட்டமாக, கஜகஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். கஜகஸ்தானில் இன்றும் வியாழக்கிழமை, நாளையும் வெள்ளிக்கிழமை(ஆக.3) என இரு தினங்கள் பயணம் மேற்கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கும் (ஆகஸ்ட் 3, 4) செல்கிறார் சுஷ்மா.
இந்த பயணத்தின்போது, 3 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் சுஷ்மா, வர்த்தக உறவுகளை ஊக்கப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்த 3 நாடுகளுக்கும் சுஷ்மா சுவராஜ் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.