ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகஎம்.பி. வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீஸ்காரர்களை கடத்தி சென்ற போராட்டக்காரர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கரிய முண்டா. இவரது வீடு குந்தி மாவட்டம் அனிகாடா சாண்டிடிக் என்ற இடத்தில் உள்ளது. இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீஸ்காரர்களை, அங்கு வந்த ‘பாதல்காடி’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களை கடத்தி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 3 போலீஸார் கடத்தப்பட்ட போது எம்.பி. கரியமுண்டா வீட்டில் இல்லை.
மலைவாழ் இனமக்களுக்கு ஆதரவாக செயல்படும் இவர்கள், போலீஸ்காரர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்ததும் குந்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி குமார் சின்கா, துணை ஆணையர் சூரஜ்குமார் ஆகியோர் எம்.பி. கரியமுண்டா வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட போலீஸாரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.