ஜெயேந்திரர் மறைவு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நேற்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி நேற்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உடல்நல குறைவால் அவர் நேற்று காலமானார்.
ஜயேந்திரர் சித்தியடைந்த செய்தியை அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஜயேந்திரர் மறைவால் காஞ்சிபுரம் நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில் நடையும் காலை முதல் மூடப்பட்டது. ஆகம விதிகளின்படி மாலை 4 மணிக்கு மேல் நடைதிறக்கப்பட்டது.
ஜயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த முக்கியத் தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சங்கர மடம் நோக்கிச் செல்லும் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஜெயேந்திரர் உடலுக்கு இன்று அபிசேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெயேந்திரருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.