ஈரானில் அமெரிக்கத் தாக்குதலில் பலியான மாணவர்கள்: ரூ. 1.84 கோடி நிவாரணம் வழங்கிய சீனா!
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு சீனா நிதியுதவி...
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரானில் உள்ள பள்ளி மீது நடத்தியத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1.84 கோடி (200,000 அமெரிக்க டாலர்) நிதியுதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
ஈரான் தெற்குப்பகுதியில் உள்ள மினாப் நகரில் அமைந்துள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது மார்ச் 1 அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக ஈரான் தெரிவித்தது.
தாக்குதல் பற்றிய விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க ராணுவத் தரப்பு கூறிய நிலையில், சம்பந்தப்பட்ட பகுதியில் ராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பற்றி எதிவும் தெரியாது என இஸ்ரேல் கூறியிருந்தது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் முகாம் முன்னதாக தாக்குதல் இலக்காக இருந்ததால் அதற்கு அருகில் இருந்த இந்தப் பள்ளியில் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாகப் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் இங் ”ஈரான் தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்ததற்கு சீனா ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சீன செஞ்சிலுவைச் சங்கத்திற்கு ரூ.1.84 கோடி நிவாரணமாக வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் இராணுவ தளங்கள் அல்லாத இடங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சீனா கண்டிக்கிறது. பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தி குழந்தைகளுக்கு பாதிப்புக்குள்ளாக்குவது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை கடுமையாக மீறுவதோடு, மனித குணம், மனசாட்சியின் அடிப்படை வரம்பையே மீறுகிறது.
மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் ஈரான் மக்களின் சிரமங்களைப் போக்கும் விதமாக சீனா தொடர்ந்து தனது ஆதரவை ஈரானுக்கு வழங்கத் தயாராகவுள்ளது” என்று அவர் தெரிவித்தார்
இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தி ஈரான் உச்ச தலைவர் கொமெனியை கொலை செய்ததைத் தொடர்ந்து, ஈரானின் நட்பு நாடான சீனா உடனடியாக போர்நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.