கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி பாஜக 117 தொகுதிகளிலும், காங்கிரஸ் 63 தொகுதிகளிலும், மஜத 40 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மையாக 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 1 மணி நேரத்திற்கு முன் வரை 90 -100 தொகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா முன்னிலையில் இருந்தது. எனவே கர்நாடகத்தில் ஆட்சியமைக்க போகும் கட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மதச்சார்பற்ற ஜனதாதளம் மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போதோ 110-க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை எட்டிப்பிடித்து வென்று விடும் என தெரிகிறது.
பாஜக 119 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே எடியூரப்பா கூறியது போல் அவர் முதல்வராகிறார். ஏற்கெனவே கோவா, உ.பி, திரிபுரா, குஜராத் என 21 மாநிலங்களில் பாஜகவின் காவி கொடி பறந்து வருகிறது. அந்த வகையில் காவிக் கொடி பறந்து வரும் மாநிலங்களில் 22-வது மாநிலம் கர்நாடகமாக விளங்குகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.