முகப்பு
தற்போதைய செய்திகள்

நிபா உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி கேரளாவில் 10 பேர் பலி: மத்திய சுகாதாரக் குழு கேரள மாநிலம் விரைந்தது

 நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி, கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

Updated On : 21 மே, 2018 at 6:00 PM
பகிர்:

நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கி, கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

நிபா வைரஸ் சில குறிப்பிட்ட வௌவால்கள், ஆந்தை மற்றும் பன்றிகளிலிருந்து பரவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினங்கள் எச்சில் பண்ண பழம், காய் மற்றும் இலைகளை உண்ணும் மனிதர்களுக்கு இந்த நிபா வைரஸ் வேகமாக பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

கேரளாவில் இந்த நிபா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி பெரம்பரா, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

2004-ம் ஆண்டில், வங்கதேசத்தில் பழந்திண்ணி வவ்வால்கள் மூலம், மரத்தில் கட்டப்படும் கள் பானைகளில் இந்த வைரஸ் பரவி அதன் மூலம் மனிதர்களை தாக்கியுள்ளது. பன்றிகள் உள்ளிட்ட பிற விலங்குகள் மூலமும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. 

வைரஸ் தாக்கினால் சுவாசக் கோளாறுகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்படும். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து உன்னிப்பாகக் கண்காணித்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தும். புனே ஆய்வகத்தில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, நிபா வைரஸ் தாக்குதல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கேரளத்தில் இந்த வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து, மாநில அரசுக்கு உதவுவதற்காக மத்திய சுகாதாரக் குழு கேரள மாநிலம் விரைந்துள்ளது. வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் நோய் தாக்கிய பன்றிகள், வவ்வால்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.