பெங்களூரு: கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பணமும், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள் சொத்துகள் குவித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், ரூ.4.52 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள், ரொக்கப் பணம், தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
என்.ஜி.கெளடய்யா, டி.ஆர்.சுவாமி ஆகியோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சந்திரசேகர் கூறுகையில், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கும் சொந்தமான பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகங்கங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் லஞ்ச ஒழிப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
இதில், டி.ஆர்.சுவாமியிடம் இருந்து ரூ.4.52 கோடி பணம், 3 கார்கள், 1.6 கிலோ தங்கம், 7.5 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 மனைகள் மற்றும் 14 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கெளடய்யாவிடம் இருந்து ரூ.77 லட்சம் பணம், வங்கி கணக்குகளில் சுமார் ரூ.30 லட்சம், 18.2 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, 3 கார்கள், 8 வீட்டு மனைகள், 2 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.