பாலியல் புகார் குறித்து வைரமுத்து விளக்கமளிக்க வேண்டும்: கமல்ஹாசன் பேட்டி
பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர்
பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் பயணமாக இன்று சேலம் புறப்பட்ட கமல், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடகம் போடுபவர்களே மழையை பொருட்படுத்தாமல் போடுவார்கள். அந்த தைரியம் சினிமா, நாடகக்காரர்களுக்கே இருக்கிறது. மழைக்காலத்திற்காக தமிழக இடைத்தேர்தலை தள்ளிப்போடுவதை ஏற்க முடியாது.
சிலைகளை மீட்க நாங்கள் உதவி செய்கிறோம் என்ற போது வேண்டாம் என்றார்கள் என்று கூறிய கமல், கோயிலில் இருப்பவர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருப்பார்கள் அவர்கள் துணை இல்லாமல் கோயிலில் உள்ள சிலைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை. கோயில் சிலைகளை தங்கள் சொத்தாக நினைத்து அதனை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றார்
மேலும், ஆளுநர் பற்றி மிகவும் ஜாக்கிரதையாக மரியாதையாக பேசப்பட வேண்டும் என்றும் அதே நேரம் தம் மீது புகார் வரும்போது தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் வரை அவர் பதவி விலக வேண்டும் என்றும் தைரியமான அரசியல்வாதிக்கு அதுதான் அழகு என்றார்.
பாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். எல்லோரும் கருத்து சொல்வது தவறு. மீடூ என்ற இயக்கம் மூலம் உண்மைகள் வெளிவந்து பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றால் அது வரவேற்க வேண்டிய ஒன்றுதான். கண்ணகி காலத்தில் இருந்தே இந்த பிரச்னை இருக்கிறது என கமல்ஹாசன் கூறினார்.