மத்திய கிழக்கு போர்! லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம் - ஐ.நா. அறிவிப்பு!
லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் ஒரே நாளில் 1 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்களின் மீது ஈரானின் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு வசித்து வரும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனால், லெபனானில் 24 மணிநேரங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பிரதிநிதி கரோலினா லிந்தோல்ம் பில்லிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கூறியதாவது:
“லெபனானில் இன்று வரை 6,67,000-க்கும் அதிகமான மக்கள் அரசின் இணையத்தளத்தில் தங்களை இடமாற்றம் செய்யப்பட்டவர்களாகப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை ஒரே நாளில் 1,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடுகையில் மிகவும் வேகமான இடமாற்றம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கவுள்ளதால் தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.