சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, முதல் தவணையாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், இரண்டாம் தவணையாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணாநதி நீரை வழங்க வேண்டும்.
கடந்த பருவத்தில் கண்டலேறு அணையின் நீர் இருப்பு 3.7.டிஎம்சியாக இருந்ததால் சென்னைக்கு ஆந்திரா அரசு தண்ணீர் திறக்கவில்லை.
இந்நிலையில், ஆந்திராவில் பெய்த கனமழையால் ஸ்ரீசைலம் அணை நிரம்பியதை அடுத்து, தெலுங்கு-கங்கா கால்வாயில் நிநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதையடுத்து சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறக்கப்படும் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் 4 நாட்களில் தமிழக எல்லையான ஜூரோ பாயிண்ட்-ஐ வந்தடையும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.