தற்போதைய செய்திகள்

ஆந்திராவில் எம்எல்ஏ சுட்டுக்கொலை: மக்கள் பிரதிநிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தலைமைச் செயலர் உத்தரவு

DIN


ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும், முன்னாள் எம்எல்ஏவும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அம்மாநில தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.  

விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வரா ராவ். பழங்குடிச் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் குடா கிராமத்தில், கருங்கல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அந்த குவாரிகளால் தங்களது வீடுகள் சேதமடைவதாக அங்கு குடியிருப்பவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூலை மாதம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மக்கள் விரோதச் செயல்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அண்மையில் மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது போதிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றும், அந்தப் பயணத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வரா ராவ். அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா இருவரும் அரக்கு தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு தனித்தனி கார்களில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

துடாங்கி என்ற கிராமம் அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்களின் கார்களை பெண்கள் உள்பட தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த 50 பேர் வழிமறித்தனர். அவர்களில் சிலரிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. எம்எல்ஏவுடன் வந்த மெய்க்காவலர்கள், காரில் இருந்து இறங்கி வழிவிடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மாவோயிஸ்ட் இயக்கத்தினர், மெய்க்காவலர்களிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், சர்வேஸ்வரா ராவையும், சிவேரி சோமாவையும் கட்டி வைத்து, தலையிலும், மார்பிலும் துப்பாக்கியால் மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அடுத்து காவல் துறை டிஜிபி ஹரீஷ் குமார் குப்தா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டார். ஆந்திரம்-ஒடிஸா எல்லையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ராமகிருஷ்ணா என்பவரது தலைமையிலான மாவோயிஸ்டு குழுவினர், இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக விசாகப்பட்டினம் சரக டிஐஜி ஸ்ரீகாந்த் கூறினார்.

எனினும், முன்னெச்சரிக்கையின்றி அங்கு சென்றதால், இந்த சோக சம்பவம் நேரிட்டது என்று காவல் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனிடையே, எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏவின் படுகொலைக்கு குற்றம்சாட்டி, அரக்கு மற்றும் தும்ரிகுடா காவல் நிலையங்களுக்குள் புகுந்து பழங்குடியினர் சூறையாடினர்.

எம்எல்ஏவுக்கும், முன்னாள் எம்எல்ஏவுக்கும் போதிய பாதுகாப்பு வழங்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கு மாறும், குறிப்பாக கிராமப்புறங்களுக்கு செல்லும் எம்.பி, எல்எல்ஏக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு அம்மாநில தலைமைச் செயலர் தினேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். 

இந்த கொடூர சம்பவத்திற்கு அமெரிக்கா சென்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT