ஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்...
சென்னை: ஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளதை அடுத்து ஆவின் பால் விற்பனை விலையையும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பசும்பால் மற்றும் எருமை பாலின் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியதாகவும், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு பின்னர் பால் விலை உயருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ள தமிழ அரசு, ஆவில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை மறுநாள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், ஆவில் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்துள்ள விளக்கத்தில், பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.
பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பால் பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து, அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் என்றும், யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த முடிவைத்தான் எடுத்திருப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.