சுனாமி 15-ஆம் ஆண்டு நினைவு நாள்: நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் மலரஞ்சலி
நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனிஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் சுனாமியாக உருவெடுத்து, சொல்ல முடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத இழப்புகளையும் ஏற்படுத்தியது.
சுனாமி சீற்றத்தால் இந்தியாவில் அதிக பாதிப்புக்குள்ளானது தமிழகம். இதில், மிக அதிக பாதிப்புக்குள்ளானது நாகை மாவட்டம். இம்மாவட்டத்தில் 5 வட்டங்களுக்குள்பட்ட 38 வருவாய்க் கிராமங்கள் பெரும் இழப்புக்குள்ளாகின. இம்மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திய சுனாமி பேரலை, ரூ. 733 கோடி மதிப்பிலான உடமைகள் சேதத்தையும் ஏற்படுத்தியது.
நாகை மாவட்டத்தில் சுனாமி சீற்றத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை (அரசு கணக்கெடுப்பின்படி) 6,065 பேர். இதில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4,231 பேர். பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 536 பேர். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.
ஆழிப்பேரலை அழித்தொழித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும், உறவுகளையும், உடமைகளையும் இழந்த மக்களின் மனதில் ஏற்பட்ட சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்தச் சோகத்தின் வெளிப்பாடாக, நாகை மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களில் ஆண்டு தோறும் டிச. 26-ஆம் தேதி சுனாமி நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி, வியாழக்கிழமை (டிச.26) நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் சுனாமி நினைவு நாள் அமைதிப் பேரணிகளும், சுனாமி நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காலை 9.30 மணிக்கு சுனாமி நினைவுப் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.