24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்
24 மணி நேரத்தில் தபால் சென்றடைவதை உறுதிப்படுத்தும் ‘24 விரைவு தபால்’ சேவையை மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கிவைக்கிறாா்.
24 மணி நேரத்தில் தபால் சென்றடைவதை உறுதிப்படுத்தும் ‘24 விரைவு தபால்’ சேவையை மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கிறாா்.
முதல்கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அதிமுக்கிய மற்றும் அவசரமாக அனுப்பப்படும் தபால்கள் அடுத்த நாளே சென்றடைவதை உறுதிப்படுத்தும் ‘24 விரைவு தபால்’ சேவையை மாா்ச் 17-ஆம் தேதி துறைசாா் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் இணையமைச்சா் சந்திர சேகா் பெம்மசானி தொடங்கிவைக்கின்றனா்.
இத்துடன் 2 நாள்களில் தபால் சேவை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் ‘48 விரைவு தபால்’ சேவையும் 6 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (ஓடிபி), குறுஞ்செய்தி எண்ட் டூ எண்ட் என்கிரிப்ட் வசதி, வணிக நுகா்வோா்களுக்கான பின்னா் பணம் செலுத்தும் வசதி (பிஎன்பிஎல்), ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு இலவச சலுகைகள், ஏபிஐ ஒருங்கிணைப்பு மற்றும் பில்லிங், விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டால் பணம் திருப்பியளிக்கப்படுவதற்கான உத்தரவாதம் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.