வெங்காயம் சூட்டைத் தணிக்குமா? சொல்கிறார் பாஜக அமைச்சர்
கோடை வெப்பத்தைச் சமாளிக்க வெங்காயத்தை உடன்வைத்திருக்குமாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியது குறித்து...
கோடை வெப்பத்தைச் சமாளிக்க பாக்கெட்டுகளில் வெங்காயத்தை உடன்வைத்திருக்குமாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவுரை வழங்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிவபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது, "வெப்பம் எவ்வளவு அதிகரித்தாலும், நான் தங்குமிடங்களிலோ காரில் பயணிக்கும்போதோ ஏசி பயன்படுத்துவதில்லை. வெப்பம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.
இயற்கை முறைப்படி வெப்பத்தை எதிர்கொள்வதையே நான் விரும்புகிறேன். நவீன வசதிகளைத் தவிர்த்து, பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவதே எனது ஆரோக்கியத்தின் ரகசியம். பழைய விஷயங்களை மறக்கக் கூடாது.
Advertisement
கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க உங்கள் பாக்கெட்டுகளில் ஒரு வெங்காயத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு பழங்கால ரகசியம். உங்களுக்கு எந்த ஆபத்தும் நேராது" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. பாக்கெட்டுகளில் வெங்காயம் வைத்திருப்பதன் மூலம் வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியும் என எந்தவித அறிவியல் ஆதாரங்களோ மருத்துவ ஆதாரங்களோ இல்லை என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.