புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ஜான்குமார் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நான்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 35,009 வாக்காளர்களில் 24,310 பேர் வாக்களித்தனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திலேயே அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,612 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடம் பெற்றார்.
இந்நிலையில், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ஜான்குமார் பதவியேற்றுக்கொண்டார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.