சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. ஆபரண தங்கம் புதன்கிழமை (செப்.4) பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.30,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது.
அதன்பிறகு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி விலை ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது. தொடர்ந்து விலை உயர்ந்து 13-ஆம் தேதி ரூ.29 ஆயிரத்தைத் தொட்டது.
அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி ஆபரண தங்கம் புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.29,704-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. புதன்கிழமை (செப். 4) பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.30,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,765-க்கு விற்பனையாகிறது. இதேபோல, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ. 2.60 பைசா உயர்ந்து 55.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.55,200 ஆகவும் இருந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும். சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பின்னடைவு, உலக அளவில் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட சரிவு, வேலைவாய்ப்பு குறியீடு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது என்று தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.