சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 67,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், நிரம்பிய நிலையில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரிநீர் காவிரியில் அதிக அளவில் வெளியேற்றப்படுகின்றன. உபரிநீர் வரத்துக் காரணமாக புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நொடிக்கு 10,235 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, வியாழக்கிழமை காலை நொடிக்கு 15,000 கனஅடியாகவும் மாலை 26,000 கனஅடியாகவும் அதிகரித்தது.
நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை காலை 115.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று வியாழக்கிழமை மாலை 116. 02 அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 87.26 டி.எம்.சி.யாக இருந்தது.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 67,000 கன அடியில் இருந்து 80,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் 50,000 கன அடியும், கபினி அணையில் 30,000 கன அடியும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.6 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் உள்ள 16 கன் மதகு வழியாக உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
40ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்படவுள்ளது.