புதுதில்லி: உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்ரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் நாளை திங்கள்கிழமை (செப்.23) பதவியேற்க உள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ராமசுப்ரமணியன், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரவீந்திர பட் மற்றும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, புதிய நீதிபதிகள் நால்வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நாளை திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளனர்.
அவர்கள் நால்வருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், ராமசுப்பிரமணியன் பதவியேற்பதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.