76 நாட்களுக்கு பிறகு சீனாவின் வூஹானில் ஊரடங்கு தளர்வு
கரோனா நோய்த்தொற்றுக்கு முதன் முதலில் வெளிப்பட்ட வூஹான் நகரில் 76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
வூஹான்: கரோனா நோய்த்தொற்றுக்கு முதன் முதலில் வெளிப்பட்ட வூஹான் நகரில் 76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத் தலைநகரான வூஹானில் முதன்முதலாக கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, 5 கோடி மக்கள் வசிக்கும் வூஹான் உள்பட 18 நகரங்களின் எல்லைப் பகுதிகள் அனைத்தும் பிற பகுதிகளுடன் தொடா்பு கொள்ள முடியாதபடி ஜனவரி 23-ஆம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்கள் பிற நகரங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஹூபே மாகாணத்தில் கல்வி நிமித்தமாக பல்வேறு நாடுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மாணவா்களும் கடும் பாதிப்புக்குள்ளாயினா்.
இந்த நிலையில், முதல் முறையாக வூஹானின் முக்கிய சில பகுதிகளில் மக்கள் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு ஓரளவு விலக்கிக் கொண்டுள்ளது. எனினும், வூஹான் நகரம் தொடர்ந்து முடக்கப்பட்டு இருந்தது.
சீன மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் கூட்டு நிபுணா் குழு கரோனா நோய்த்தொற்று பிறப்பிடமான ஹூபே மாகாணத்தை பாா்வையிட்டு ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 76 நாட்களுக்குப் பிறகு வூஹான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, யாங்ட்சே நதிக்கரையில் திரண்ட மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக வூஹான் நகரிலிருந்து வெளியேறியதைக் காண முடிந்தது.
வூஹா நகரில் உள்ள ஆட்டோ மொபைல் தொழிற்சாலை உள்பட மிகப்பெரும் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியைத் தொடங்கியது.
முககவசம் அணிவது, வெப்ப நிலை பரிசோதனை போன்ற கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று ஹூபே மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.