பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது.
புதுதில்லி: பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது.
தேசிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அதே நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமில்லாத இடங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்றும் அவா் கூறினாா்.
மேலும், வருகிற 20-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். நோய்த்தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு. அதேவேளையில் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதன்படி, மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய்த்தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக் கூட்டங்களுக்கான தடை தொடரும். அதேபோன்று மத நிகழ்வுகள், வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும். இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.