சர்வாதிகாரி பழனிசாமி இனி எப்போதும் வெல்ல மாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!
திமுகவில் இணைந்ததற்கு பின்னர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி....
சர்வாதிகார ஆணவப்போக்குடன் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து விலகியவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று(பிப். 27) திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர் வேறு கட்சியில் இணைவது இதுவே முதல்முறையாகும்.
சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வருகைதந்த ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஓ. பன்னீர்செல்வம்,
"இன்றைக்கு அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை திமுகவில் இணைத்துக் கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலில் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியல் பண்பாட்டுடன் கட்சியையும் ஆட்சியையும் ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து பெருமகிழ்ச்சியுடன் திமுகவில் என்னை இணைத்திருக்கிறேன்.
சர்வாதிகார ஆணவப்போக்குடன் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி, என்றைக்கும் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் இயக்கத்தை நட்போடு அரவணைத்துச் செல்கிறார் ஸ்டாலின். கடந்த 5 ஆண்டு காலம் முதல்வராக அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
இயக்கத்தை அழிக்க எந்த சூழ்நிலையில் தடைகள் வந்தாலும் அதனைத் தடுத்து அண்ணா வழியில் சிறந்த திராவிடத் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.
சர்வாதிகாரத்தனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். என்பதில் அதிமுக தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக தென் மாவட்டத்தில் இருந்து எந்த தலைவரும் வரக் கூடாது என்பதில் இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார்.
எனவே, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த இயக்கமாக திமுக உள்ளதால் அதில் என்னை இணைத்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என சுயமாக பொறுமையாக சிந்தித்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அனைவரையும் அரவணைத்துச் செல்கிற போக்கு அதிமுகவில் இப்போது இல்லை. வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். திமுகவை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை. தமிழகத்தைக் காக்க திமுகவால்தான் முடியும்" என்று கூறினார்.
O. Panneerselvam press meet after joining DMK
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.