வங்காளதேசத்தில் பத்திரிகையாளர் கரோனா நோய்த்தொற்றுக்கு பலி
வங்காளதேசத்தில் பிரபல பத்திரிகையின் தலைமை செய்தியாளர் ஒருவர் கரோனா நோய்த்தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு டாக்கா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
டாக்கா: வங்காளதேசத்தில் பிரபல பத்திரிகையின் தலைமை செய்தியாளர் ஒருவர் கரோனா நோய்த்தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு டாக்கா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று வங்காளதேசத்திலும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. அந்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனம் டெய்னிக் சமோயர். இதில் நகர ஆசிரியரும், பத்திரிகையின் தலைமை செய்தியாளராக பணியாற்றி வந்தவர் ஹுமாயூன் கபீர் கோகன் (47). இவர் சுவாச பிரச்னை மற்றும் தலைவலி, கரோனா நோய்த்தொற்று போன்ற அறிகுறிகளுடன் டாக்கா நகரின் உத்தரா பகுதியில் உள்ள ரீஜன்ட் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் இரவு 10.15 மணியளவில் அவர் இறந்ததாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.டி.ஷேத் கூறினார். மேலும் அவர் ஏற்கெனவே ஆபத்தான நிலையில் இருந்தார் என்றும், " அவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருந்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் நோயைக் கண்டறிவதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டார்" என்று ஷேத் கூறினார்.