பொதுமுடக்கத்தால் ஈரோட்டில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா: காவலர்கள் தீவிர கண்காணிப்பு
கரோனா பொது முடக்கத்தால் ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது.
ஈரோடு: கரோனா பொது முடக்கத்தால் ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில், ஆடி பெருக்கு திருவிழா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆடி முதல் நாள், தலையாடியன்று முளைப்பாளி விதையிட்டு, 18 நாள்கள் அது வளர்ந்த பின்பு, ஆடி பெருக்கு அன்று ஆற்றில் விடுவது சம்பிரதாயம்.
ஆறோடு செல்லும் முளைப்பாளியில் உள்ள விதைகள், ஆறு செல்லும் போக்கில் உள்ள கரைகளில் ஒதுங்கி அப் பகுதியை செழிக்க வைக்கும். அதே போல நம் வாழ்வும் செழிக்கும். ஓவ்வொரு ஆண்டும் ஆடி 18 நாள், ஆடி பெருக்கு ஈரோடு காவிரி ஆற்றின் கரையில் சிறப்பாக கொண்டாடப்படும். அதில் காவிரி ஆற்றுக்கு குடும்பத்துடன் வரும் பொதுமக்கள் புனித நீராடி, காவிரி ஆற்றின் கரையில், படையலிட்டு அதில், காதோலை கருகமணி வைத்து, இயற்கையையும், குலதெய்வத்தையும் வழிபடுவது வழக்கம்.
முதல் ஆடி பெருக்கு விழாவை கொண்டாடும் புதுமண இளம் தம்பதியினர். திருமணத்தில் சூட்டிய மலர் மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வணங்குவர். சுமங்கலி பெண்கள் பழைய தாலி கயிற்றை அகற்றி ஆற்றில் விட்டு, புதிய தாலி கயிற்றை கட்டிக் கொள்வர். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு காவிரி ஆற்றின் கரையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு ஆட்சியர் கதிரவன் ஊரடங்கு காரணமாக நீர் நிலைகளில் மக்கள் கூட அனுமதி இல்லை அதை மீறி வரும் மக்கள் வந்தால் அவர்கள் மீதும் அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் இன்று ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவில் முக்கடல் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இலட்சக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம் ஆனால் இன்று தடை காரணமாக பவானி கூடுதுறை வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கே ஏற்கனவே பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு வேலிகள் அமைத்து காவலர்கள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று விடாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.
இதுபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் மற்றும் ஆற்றங்கரை பகுதியில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இங்கும் காவலர்கள் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வரவில்லை. ஆனால் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மக்கள் வந்து புனித நீராடி சென்றனர். மேலும் சில மக்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு விழாவை எளிமையான முறையில் கொண்டாடினர்.