போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா பொதுமுடக்கத்தையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது போல் ஆகஸ்ட் மாதத்திலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து போடி நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே இறைச்சி வியாபாரம் களைகட்டியது. பெரும்பாலான இறைச்சி கடைகளில் அதிகாலை 3 மணி முதலே கூட்டம் காணப்பட்டது.
பின்னர் காலை 8 மணி வரையிலும் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் சென்று வந்தனர். தேவர் சிலை, திருவள்ளுவர் சிலை, பழைய பேருந்து நிறுத்தம், வஞ்சி ஓடை தெரு, புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை சந்திப்புகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
8 மணிக்கு மேல் போடி பகுதியில் காவல் துறையினர் ரோந்து சுற்ற ஆரம்பித்தனர். இதனையடுத்து சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் சாலைகளுக்கு வருவதை தவிர்த்தனர். இதனால் போடி காமராசர் சாலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை, உத்தமபாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், அம்மா உணவகம் ஆகியவை மட்டும் செயல்பட்டன. போடி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. காவலர்கள் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.