முகப்பு
தற்போதைய செய்திகள்

92 அடியாக உயர்ந்த பவானிசாகர் அணை நீர்மட்டம்: கீழ்பவானி  பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

பவானிசாகர் அணை நீரமட்டம் 92 அடியாக உயர்ந்துள்ள நிலையில், கீழ்பவானி பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
பகிர்:


ஈரோடு: பவானிசாகர் அணை நீரமட்டம் 92 அடியாக உயர்ந்துள்ள நிலையில், கீழ்பவானி பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் தற்போது காளிங்கராயன், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு பவானிசாகர் அணையின் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்திற்கு வரும் 15 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 105  அடியில் இன்று காலை 11 மணி  நிலவரப்படி 92 அடி அளவுக்கு அணையில் தண்ணீர் இருப்பு உள்ளது.  தண்ணீர் வரத்து 36,000  கன அடி அளவுக்கு உள்ளது. இதே நிலை நீடித்தால் 3 அல்லது 4 நாட்களில் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்துவிட வேண்டிய நிலை ஏற்படும்.  இதனால் கீழ்பவானி பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.   

இதுகுறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் கூறியதாவது, கீழ்பவானி வாய்க்காலில் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை காரணமாக காட்டி தண்ணீர் திறப்பை காலதாமதம் செய்து வருகின்றனர். இந்த கட்டுமான பணியை உடனடியாக நிறுத்திவிட்டு கீழ்பவானி பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை முன்வர வேண்டும். உபரி நீரை ஆற்றில் திறப்பதற்கு பதிலாக பாசனத்திற்கு திறந்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றனர்.

Caption

முழு கட்டுரையைப் படிக்க →