காட்டு யானை தாக்கி வீடு சேதம்
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அருகே காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளியின் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அருகே காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள கூலித்தொழிலாளியின் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கத்தரி தோடு பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியம். கூலித் தொழிலாளியான இவரது வீட்டை நேற்று முன்தினம் அதிகாலையில் காட்டு யானை ஒன்று இடித்து சேதப்படுத்தி உள்ளது.
நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. அதிகாலையில் யானை அப்பகுதிகளில் இருப்பதை அறிந்த பாலசுப்பிரமணியம் செல்போன் மூலம் அருகில் உள்ள வீடுகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அப்போது திடீரென காட்டு யானை ஒன்று அவரது வீட்டின் சுவற்றை இடித்து உள்ளது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து உள்ளே விழுந்துள்ளது. இதனால் பயந்துபோன வீட்டில் உள்ளவர்கள் வேறொரு அறைக்குள் புகுந்து பதுங்கி இருந்துள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் யானைகளை விரட்டியதை அடுத்து 6 மணியளவில் யானைகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றுள்ளன. இப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.