ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15.35 லட்சம் கொள்ளை போனதாக காவலர்கள் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூரை சேர்ந்த ராமசாமி மற்றும் தேனியை சேர்ந்த வரதராஜன் ஆகியோர் இணைந்து, ராஜபாளையத்தில் ஜெயமுருகன் என்ற பெயரில், வட்டிக்கு பணம் கொடுக்கும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இதற்காக கலங்காபேரி சாலையில் வீடு ஒன்றை வாடகைக்கு பிடித்து அலுவலகம் நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையத்தை சுற்றி உள்ள கிராமங்கள், தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் மற்றும் புளியங்குடியை சேர்ந்த மக்கள் வரை இந்த நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு கரூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மேலாளர் தலைமையில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சசிகுமார், அருண், சக்திவேல், முருகவேல், ராஜ்குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
நிறுவனத்தில் மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் குடும்பத்துடன் அருகருகே வசித்து வந்த நிலையில், சசிக்குமார் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மட்டும் அலுவலகம் அமைந்துள்ள வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம் போல ஊழியர்கள் மற்றும் மேலாளார் அலுவலகத்தை பூட்டி விட்டு வசூலுக்கு சென்று உள்ளனர். மாலை வந்து பார்த்த போது, அலுவலகத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, அலுவலகத்தின் உள் பகுதியில் இருந்த பீரோ மற்றும் இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் ரூ. 15.35 லட்சம் கொள்ளை போயிருந்தது.
இது குறித்து மேலாளர் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.டி.எஸ்.பி நாகசங்கர் தலைமையில் மோப்ப நாய் ராக்கி மூலம் ஆய்வு மேற்கொண்டதில், மோப்ப நாய் சத்திரப்பட்டி சாலை வரை சென்று திரும்பியது.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீடு முழுவதும் சோதனை நடைபெற்றது. மேலும் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.