கமுதியில் ரூ. 1.75 கோடி வெடிபொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு: முதற்கட்டமாக 500 கிலோ அழிப்பு
ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள 2500 கிலோ வெடி பொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் முதல் கட்டமாக 500 கிலோ அழிக்கப்பட்டது.
கமுதி தனி ஆயுதப்படையில் பாதுகாக்கப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்புள்ள 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் வெடி பொருளை அழிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் முதல் கட்டமாக 500 கிலோ அழிக்கப்பட்டது.
ராமநாதபுரத்திலிருந்து கடல் வழியாக கடந்த 2007-ல், இலங்கைக்கு கடத்த முயன்ற 2500 கிலோ எடையுள்ள ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொட்டாசியம் நைட்ரேட் எனப்படும் வெடி பொருளை ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு பரமக்குடி நீதிமன்றத்தில் விசாரனை முடிந்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கும் 2020 மார்சில், முடிவடைந்தது.
இவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், கடந்த 2016-ம் ஆண்டு முதல் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தனி அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கொரானா பிரச்னையில் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் வெடி பொருளை அழிக்க நீதிமன்ற உத்தரவிற்காக காவல்துறையினர் காத்திருந்த நிலையில் வழக்கு முடிவடைந்ததால், தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் விரைவில் வெடி பொருட்கள் அழிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து சென்னை வெடிபொருள் கண்டறிதல், அழித்தல் ஆய்வாளர் ஜெயராமன், சார்பு ஆய்வாளர் ஜெயராமடு தலைமையில், 7 பேர் கொண்ட குழு முதல்கட்டமாக 500 கிலோ வெடி மருந்து பொருட்களை, கமுதி அருகே காட்டு பகுதியில் தீ வைத்து பாதுகாப்பாக அழித்தனர்.