விநாயகர் சதுர்த்தி விழா: கம்பம் கூடலூர் பகுதிகளில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாலையம்மாள்புரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தங்கவிநாயகர்கோவில், ஆதிசக்தி விநாயகர்கோவில், உத்தமபுரத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவில், தாத்தப்பன் குளத்தில் உள்ள வெள்ளை விநாயகர், வரதராஜபுரம், பாரதியார் நகர், சுருளி ப்பட்டி சாலை, பூங்கா திடல், நாட்டுக்கல், தாத்தப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. மாலையம்மாள் புரத்தில் உள்ள ராஜகணபதி ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக விநாயகர் உற்சவரை பல்லாக்கில் வைத்தும் பெண்கள் பால்குடம் எடுத்து மாலையம்மாள்புரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பெண்கள் பொங்கல், சுண்டல்,கொழுக்கட்டை வைத்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கூடலூர், லோயர் கேம்ப், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி சுருளிப்பட்டி, நாராயணத் தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி ராயப்பன்பட்டி ஆகிய பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.