ஜூம் செயலி கடந்த திங்கள்கிழமை சில நாடுகளில் ஒரு மணிநேரம் செயலிழந்ததுக்கு ஜூம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஏரிக் யுவான் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் ஜூம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் ஒரு மணிநேரம் வரை ஜூம் செயலி செயலிழந்தது.
ஜூம் செயலி செயலிழந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வணிக நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான பயனர்கள் திங்களன்று வீட்டிலிருந்து காணொளி மூலம் இணைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜூம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஏரிக் யுவான் சுட்டுரையில் கூறுகையில், இன்று ஜூம் செயலி செயலிழந்ததால் எங்களது பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகியது உணர முடிகிறது. உங்கள் பள்ளி வகுப்பறைகள், கூட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை முறையாக நடத்த உதவுவது எங்கள் பொறுப்பாகும்.
இந்த இடையூறுகளுக்கு மிகவும் வருந்துகிறோம். எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். மேலும், செயலியின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உங்கள் பொறுமைக்கும், உங்கள் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கும் மன்னிப்புக் கேட்டு கொள்கிறோம் என கூறினார்.
உலகளவில் ஜூம் செயலியை 30 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், செயலி செயலிழப்பிற்கான காரணங்கள் தெரிவிக்கவில்லை.