முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளை நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் 

கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
கல்லூரி, பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை
பகிர்:


புதுதில்லி: கல்லூரி, பல்கலைக்கழக இறுதி ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த தடையில்லை என்றும் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கரோன தொற்று பரவல் அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் இறுதி ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி மராட்டியம், தில்லி, மேற்குவங்கம் மற்றும் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். 

இது தொடர்பாக நடந்த வழக்கில், தேர்வு நடத்தாமல் வழங்கப்படும் பட்டங்களை அங்கீகரிக்க முடியாது என பல்கலைக்கழக மானிய குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்த மனுவை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. 

தீர்ப்பில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு இறுதித் தேர்வை நடத்தலாம் எனவும், இறுதித் தேர்வை நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்தது.

மேலும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகளை நடத்தாமல் மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக மானியக் குழுவின் ஜூலை 6 ஆம் தேதி சுற்றறிக்கையை உறுதி செய்தது.

மாணவர்களை ஊக்குவிக்க மாநிலங்கள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநிலங்கள் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியும் என்றும் அதற்குரிய கால அவகாசத்தை பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி) அணுகி கேட்கலாம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →