போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: தேமுதிக
தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு தேமுதிக ஆதரவாக இருக்கும் என்று மாநில துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
தருமபுரி: தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு தேமுதிக ஆதரவாக இருக்கும் என்று மாநில துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
தருமபுரியில் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி டிஎன்சி விஜய் மஹாலில் நடைபெற்றது. நகரச் செயலர் பாண்டியன் வரவேற்றார். மாவட்டச் செயலர் தம்பி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் மருத்துவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக மாநில துணைச் செயலர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேமுதிக சார்பில் தேர்தல் குறித்த மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் தொடங்கி உள்ளோம். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் கருத்தை கேட்டறிந்து தான் முடிவு செய்வோம். வருகிற ஜனவரி மாதம் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, கட்சியின் நிலைப்பாடு குறித்து தலைவர் அறிவிப்பார். சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். என்னை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்க மாட்டார். தொடங்க போவதும் இல்லை.
வேளாண் சட்டங்கள் எதிர்த்து புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு எப்போதும் தேமுதிக ஆதரவாக இருக்கும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். இக்கோரிக்கையை தொடர்ந்து தேமுதிக வலியுறுத்தும் என்றார்.