தில்லியில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியை முற்றுகையிட்டு பல்வேறு விவசாய அமைப்புகள் இன்று 19 ஆவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாய, சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் போராட்டத்தின் ஒருபகுதியாக விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திக்ரி எல்லைப் பகுதியில் விவசாயிகள் இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் அதிஷி மார்லேனா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.