ஊத்துக்கோட்டை: சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் நேற்று நள்ளிரவு வீட்டிற்கு திரும்பி வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது நள்ளிரவு அம்பேத்கர் நகர் பகுதி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கிருஷ்ணா கால்வாயில் விழுந்தது. இதில், காரில் இருந்த தெய்வானை அம்மாள்(76), வைசாலி(17) சம்பவ இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக முருகப்ப பாண்டிய நாடார் மற்றும் அவரது மனைவி மற்றும் இன்னொரு நபர் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லாததே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.