பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே மறு வாக்கு என்ணிக்கை கோரி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அல்லிநகரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மேல உசேன் கிராமத்தைச் சேர்ந்த (அதிமுக) மருதமுத்து (45), தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த (திமுக) பழனிவேல் (36) ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், அல்லிநகரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மருதமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையறிந்த, பழனிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வாக்கு எண்ணிக்கையில் அதிகாரிகள் உள்நோக்கத்தோடு குளறுபடி செய்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும், பெரம்பலூர் - அரியலூர் சாலையில், குன்னம் அருகேயுள்ள அல்லிநகரம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குன்னம் போலீஸார் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்- அரியலூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.
முன்னதாக, பழனிவேல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.