நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 15-ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டில் கரோனா தொற்றால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவை கொண்டாட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டது. அதன்படி நாமக்கல்லில் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் மு.ஆ. உதயகுமார் காமராஜர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் நாமக்கல் மாவட்டத்திற்கு காமராஜர் முதல்வராக இருந்தபோது பள்ளிகள் திறப்பு, சமுதாய கூடம் திறப்பு உள்ளிட்டவற்றுக்கு வந்து சென்ற நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் முருகேசன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.