புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 147 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,743 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் வியாழக்கிழமை 1,079 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதுச்சேரியில் 128 பேருக்கும், காரைக்காலில் 12 பேருக்கும், ஏனாமில் 7 பேருக்கும் என மொத்தம் 147 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,743 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 9 மாத ஆண் குழந்தை ஒன்று ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தது. இதனால் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் 379 பேரும், ஜிப்மரில் 177 பேரும், கொவைட் கேர் சென்டரில் 117 பேரும், காரைக்காலில் 67 பேரும், ஏனாமில் 33 பேரும், மாஹேவில் ஒருவம் என மொத்தம் 774 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 947 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 27,916 பேரை பரிசோதனை செய்ததில் 25,907 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 270 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என்றார் அமைச்சர்.