சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து களியக்காவிளை காவல் நிலையம் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிதறால் பகுதியைச் சேர்ந்தவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து அவர் அரசு மருத்துவமனை சென்று சளி மாதிரி பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனை முடிவு புதன்கிழமை இரவு வெளியானது. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை சுகாதாரத்துறையினர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.
மேலும் தொற்று பாதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் புதன்கிழமை வரை களியக்காவிளை காவல் நிலையத்தில் பணி செய்து வந்தார். இதன் காரணமாக வியாழக்கிழமை முதல் காவல் நிலையம் பூட்டப்பட்டது. தொடர்ந்து இக்காவல் நிலையம் களியக்காவிளை தனியார் திருமண மண்டபத்தில் இருந்து தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இதையடுத்து களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்களிடமிருந்து சளி மாதிரி எடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.