ஆந்திரம்: மச்சிலிபட்டினம் சட்டமன்ற தொகுதியில் முழு ஊரடங்கு
ஆந்திர மாநிலத்தில் உள்ள மச்சிலிபட்டினம் சட்டமன்ற பகுதியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மச்சிலிபட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் மச்சிலிபட்டினம் சட்டமன்றப் பகுதியில் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுபடுத்துவது குறித்து புதன்கிழமை போக்குவரத்து துறை அமைச்சரும் மச்சிலிபட்டினம் சட்டமன்ற உறுப்பினரும் ஆன பெர்னி வெங்கடராமையா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முடிந்து வெங்கடராமையா ஊடகத்தினரிடம் கூறுகையில்,
கரோனா நம் பகுதியில் தீவிரமடைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் திங்கள் முதல் ஞாயிறு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
ஆகையால் மக்கள் கடைசி நேரத்தில் அவதி படாமல் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை இப்பகுதியில் செயல்பட அனுமதிக்கப்படும். மற்ற அனைத்து கடைகளும் முற்றிலும் மூடப்படும்.
மருத்துவ அவசரநிலைகளைத் தவிர்த்து வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியேற கூடாது. மக்கள் வழிகாட்டுதல்களை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
மேலும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் முகமூடி அணிவது கட்டாயம் என கூறினார்.