சீர்காழி இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு கரோனா: வட்டாட்சியர் அலுவலகம் மூடல்
மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
சீர்காழி: மாவட்ட எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இளநிலை வருவாய் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
நாகை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர், மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் குறித்து கண்காணிப்பு மற்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் தாமாக முன் வந்து கரோனா பரிசோதனை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. எல்லை கண்காணிப்பு பணியில் இருந்த இவர் வெள்ளிக்கிழமை வரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் அலுவல் பணியாக வந்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மக்கள் யாரும் வந்து செல்லாமல் இருப்பதற்காக மூடப்பட்டு அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சக அதிகாரிகளும் ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர்.