தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டியில் மணல் குவாரி செயல்படுவதைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சென்னம்பூண்டியில் 2006 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை மணல் குவாரி அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணல் குவாரி அகற்றப்பட்டது.
இந்நிலையில் நான்காவது முறையாக அப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி அமைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகக் கிராம மக்கள் புகார் எழுப்பி வந்தனர்.
எனினும், குவாரியில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் சட்டத்திற்குப் புறம்பாகவும் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
எனவே பல்வேறு கட்சிகள், விவசாய சங்கங்களுடன் இணைந்து கிராம மக்கள் திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.