பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் பகுதியில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்த தொழிற்சங்கத்தினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். வாகனங்களுக்கு காப்பீடு செலுத்த ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும். நிதி நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய வாகன கடனுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கு மேலும் 6 மாதக் காலத்துக்கு அவகாசம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.