சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெற்றது.
நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். கரோனா தொற்று ஊரடங்கை முன்னிட்டு பக்தர்கள் அனுமதியில்லாததால், பொதுதீட்சிதர்கள் மட்டும் தரிசன விழாவில் பங்கேற்றனர். ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன்.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் பி.கங்காதர தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து 10 நாள்களும் பஞ்சமூர்த்திகளான உற்சவ மூர்த்திகள் வீதி உலா கோயில் உள் பிரகாரத்திலேயே நடைபெற்றது. ஊரடங்கு முன்னிட்டு ஜூன்.27-ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறவில்லை. உள் பிரகாரத்திலேயே சுவாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி மாவட்ட நிர்வாகம் அனுமதியளிக்காத நிலையில் நிலையில் நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் கோயிலினுள் உள்ள தேவசபையில் எழுந்தருளினர். பின்னர் பொதுதீட்சிதர்களின் வேண்டுகோளை அடுத்து மாவட்ட நிர்வாகம் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி எழுந்தருள அனுமதியளித்ததை அடுத்து நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை எழுந்தருளினர்.
பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. நிறைவாக பக்தர்களால் கொடுக்கபட்ட 144 -தங்க காசுகளால் சுவாமிக்கு சொர்ணாபிஷேகம் செய்யப்பட்டது, கடந்த காலங்களில் ஆனி, மார்கழி தரிசன திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டப முகப்பில் மகாபிஷேகம் தொன்று, தொட்டு நடைபெற்று வந்தது.
இந்த ஆண்டு கடந்த 44 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அம்பாளுக்கும் நடராஜ மூர்த்திக்கும் மகா அபிஷேகம் மகா தீபாராதனை ஆகியவை ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே உள்ள ராஜ தர்பார் மண்டபத்தில் நடைபெற்றது என தீட்சிதர்கள் தெரிவித்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சிதசபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட தீட்சிதர்கள் இந்நிகழ்ச்சியை வெகு சிறப்பாக செய்து உலகத்தில் உள்ள அனைவரும் கரோனோ தொற்றிலிருந்து விடுவிக்கவும், உலக நன்மை வேண்டியும் பிரார்த்தனை செய்யப் பட்டதாக சிதம்பரம் நடராஜர் ஆலய பொது தீட்சிதர்கள் தெரிவித்தனர்.
பகல் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரத்தில் வலம் வந்த பின்னர் பிற்பகல் 4.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. கோயில் பிரதான வாயிலில் சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன் தலைமையில் ஆய்வாளர்கள் சி.முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.