கொடுமுடி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்தது: 4 பேர் பலி
கொடுமுடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு: கொடுமுடி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரகுநாதன் (வயது 41), மணி என்ற முருகசாமி (50), தாமோதரன்(40), ஆனந்த் என்ற கிருஷ்ணசாமி(35). இவர்கள் நான்கு பேரும் உறவினர்கள். இதில் ஆனந்தனும் தாமோதரனும் சகோதரர்கள். இவர்கள் 4 பேரும் வீரணம்பாளையத்தில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை இவர்கள் நான்கு பேரும் தங்களது தொழில் சம்பந்தமாக வீரணம்பாளையத்திலிருந்து கரூருக்கு கொடுமுடி வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கொடுமுடி அருகே பள்ளக்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் எதிர்பாராத விதமாக சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். சம்பவம் குறித்து அறிந்த கொடுமுடி போலீஸார் பலியான 4 பேரின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.