நாமக்கல்லில் மாவட்ட பாஜக அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா
நாமக்கல்லில் மாவட்ட பாஜக அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட பாஜக அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் பாஜகவை பலப்படுத்த அக்கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு மாநில கட்சிகளுக்கு எதிராக உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருகின்றனர்.
தேசிய அளவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் சொந்த கட்டடத்தில் கட்சி அலுவலகம் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவிடம் மாவட்ட பாஜகவினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனடிப்படையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சுமார் 6000 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் மாவட்ட பாஜக அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோட்ட பொறுப்பாளர் ஏ.பி. முருகேசன், மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இன்னும் 8 மாத காலத்திற்குள்ளாக கட்டுமானப் பணியை முடித்து திறப்பு விழா மேற்கொள்ள அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.