ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்த கேரளத்தைச் சேர்ந்த இந்திய வீரருக்கு கேரள முதல்வர் இரங்கல் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போர் நிறுத்த உத்தரவை மீறி பாகிஸ்தான் வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நயிக் அனீஷ் தாமஸ் (வயது 36) என்பவர் உயிரிழந்தார். இவர் கேரள மாநில கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரது உயிரிழப்பிற்கு கேரள முதல்வர் பிணராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா இரங்கல் தெரிவித்தனர்.
மேலும், தாமஸின் உடல் வியாழக்கிழமை சொந்த ஊரான கொல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினர் கண்காணித்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறிப்பிடத்தக்கது.