தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னையில் காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கடந்த ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஆண்டில் தமிழகத்தில் முதல் நாளாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், சென்னை முழுவதும் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் மூடி, பிரதான சாலைகளில் 2 கி.மீ இடைவெளியில் ஒரு சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. திருமணங்களுக்கு செல்வோர் அழைப்பிதழை காண்பித்து செல்கின்றனர்.
இதுதவிர, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
முழு ஊரடங்கை அடுத்து சென்னையில் உள்ள பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன.
இதனிடையே, தமிழகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் நாளை(ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.